Friday, 14 April 2017

முதல் பொறாமை



தமிழ்ப் புத்தாண்டு விடுமுறைக்காக பெங்களுரிலிருந்து இன்று அதிகாலை ஐந்து மணியளவில் சென்னை வந்து இறங்கினேன். சென்னை சென்ட்ரல் புறநகர் ரயில் நிலையத்தில் கிளம்பத் தயாராக இருந்த ரயிலில் ஏறி அமர்ந்து எதிர் இருக்கையில் கால் நீட்டி அரை தூக்கத்தில் ஆழ்ந்தேன். நான்கு ரயில் நிலையங்களைக் கடந்து சென்ற பிறகு ஓர் வயதானவர் ரயிலில் ஏறினார். என் எதிர் இருக்கையில் தான் படுத்துக் கொள்ளலாமா என்று கேட்டார். எதிர் இருக்கையில் அவருக்கு இடம் அளித்து என் இருக்கையில் நான் நேராக நிமிர்ந்து உட்கார்ந்தேன்.

இன்னும் சில ரயில் நிலையங்கள் கடந்த பிறகு தூக்கம் தெளிந்து எழுந்து அமர்ந்தார். தான் அடுத்த ரயில் நிலையத்தில் இறங்க வேண்டும் என்றும், தினமும் இப்படி அதிகாலை நேரத்தில் ரயிலில் பயணம் செய்ய வேண்டி இருப்பது சற்று கடினமாக இருப்பதாகவும் சொன்னார்

"வேலை செய்றீங்களா?"  என்று கேட்டேன்.

"ஆமாம். கூட்டிப் பெருக்கிற வேல செய்றேன்"  என்றார்.

"ஆறு வருஷமா கூட்டி பெருக்குற வேல பாக்றேன் !" என்று தான் பார்க்கும் தொழிலை ஒரு பெருமிதத்துடன் அவர் சொன்ன போது மிகவும் வெட்கிப் போனேன்

உலகளவில் மிகவும் பிரபலமான ஒரு மென்பொருள் நிறுவனத்தில் பணியாற்றி, கை நிறைய சம்பாதிக்கும் எனக்கு நான் பார்க்கும் தொழிலைப் பற்றி பிறரிடம் பேசுகையில் ஏனோ அந்த முதியவரின் கண்களில் தெரிந்த பெருமிதம் என்னிடத்தில் இருந்ததே இல்லை எனத் தோன்றியது.


வாழ்க்கையில் முதன் முறையாக அவரைக் கண்டு பொறாமை கொண்டேன்.

No comments:

Post a Comment

Heart's wisdom

Life is much easier when you are blissfully unaware of everything that's messed up about the way their world functions.  But life is kin...